Sunday, July 4, 2010

11. காற்றிக்கு என்றொரு வாசல் இல்லை

காற்றிக்கு என்றொரு வாசல் இல்லை
மண்ணிற்கு என்றொரு மணமில்லை
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை
கடல்நீரால் தாகம் தணிவதில்லை

நீரை அடித்தால் வேறாவதில்லை
குற்றம் காண்போருக்கு சுற்றமில்லை
காண்பதை எல்லாம் நம்புதற்கில்லை
வேகமும் விவேகமும் நண்பர்களில்லை

ஆணவம் ஆயுதமாவதில்லை
நாவினால் சுட்ட புண் ஆறுவதில்லை
வினை விதைத்தவன் தினை அறுப்பதில்லை
நஞ்சின் சுவை கண்டு வாழ்ந்தவரில்லை

தாயுள்ளம் ஒருபோதும் சபிப்பதில்லை
தாய்மைக்கு சேய் ஒரு பாரமில்லை
பிஞ்சு நெஞ்சில் என்றும் வஞ்சம் இல்லை
வஞ்சித்தவர் மகிழ்வு நீடிப்பதில்லை

ஆழ்மனம் என்றும் உறங்குவதில்லை
ஆழ்கடலின் ஆழம் கண்டவரில்லை
ஆறாத சினத்தால் ஆரோக்கியமில்லை
அன்பினால் ஆகாதது ஒன்றுமில்லை

ஆகாசம் பூமியைத் தொட்டதில்லை
ஆராய்ந்து பார்த்தால் மெய் தப்புவதில்லை
தன்னை அறிந்தால் மனதில் அகந்தை இல்லை-கண்ணனை
தினம் நினைந்தால் குழலோசை கேட்காமலில்லை
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment