Thursday, November 19, 2009

8. நடுநிசியில் தேய்பிறையில்



 நடுநிசியில் தேய்பிறையில் சிறை அறையில் உதித்தாயே
நாலிரண்டு திதியினிலே ஆவணியில் பிறந்தாயே
உதிக்குமுன்னே உதரத்தில் உக்தி பல செய்தாயே
இதிஹாச பாலகனாய் இடம் மாறி வளர்ந்தாயே

அடைமழையில் காரிருளில் கரை புரளும் நதி நடுவே
அரவம் குடை பிடிக்க கூடை தனில் இருந்தாயே
பசுந்தளிராம் உன்னைத் தலைக் கூடையிலே கொண்டு சென்ற
வசுதேவனாம் தந்தை தன தலைவிதியை என் சொல்வேன்

சேயுனக்குப் பாலூட்டத தாயிருந்தாள் கோகுலத்தில்
சேயாக தேவகிக்கு யார் இருந்தார் கொடுஞ்சிறையில்?
அறிவாயோ கண்ணா நீ தேவகி தாப நிலை?
அடடா எத்தாய்க்கும் வேண்டா இது போன்ற துன்ப நிலை

மாமனைப் பயன்தெங்கும் ஓடவேண்டா மாணிக்கமே
சேயுனைத் தாங்குமினி என் மனமாகும் காப்பகமே
கண்ணா உன் நாடகத்தில் நானும் ஒரு பாத்திரமாய்
கலந்திடுவேன் உனைத் தேடி என் நெஞ்செங்கும் தோத்திரமாய்


1 comment:

  1. "சேயுனக்குப் பாலூட்டத தாயிருந்தாள் கோகுலத்தில்
    சேயாக தேவகிக்கு யார் இருந்தார் கொடுஞ்சிறையில்" - so thoughtful of you to think of a Mother's plight! On the whole a wonderful song, undoubtedly !
    one small correction can i suggest? is it not 'udharam' meanig 'stomach' in place of the word 'Udhiram'(உதிரத்தில்). "udhiram" means "blood" . Or you mean 'udhiram' only?

    ReplyDelete